மணிரத்னம் படத்தை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் படத்தை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராய்
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதை, கேன்ஸ் திரைப்பட விழாவில் உறுதி செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார் மணிரத்னம். இதில் நடிக்க கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், எந்தவொரு நடிகருமே மணிரத்னத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி அதிகாரபூர்வமாக வெளியே கூறவில்லை.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். அங்கு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், படங்களில் ஏன் அதிகமாக நடிப்பதில்லை?, 'ஃபன்னே கான்' என்ற ஒரே ஒரு படம்தான் வந்துள்ளது என்று ஐஸ்வர்யா ராயிடம் கேட்டதற்கு, அவர் கூறியிருப்பதாவது:

“வாழ்க்கையில் கவனம் செலுத்த, ஒரு தாயாக கவனம் செலுத்த நேரத்தைச் செலவிட்டேன். நிறைய பொறுப்புகள் உள்ளன. அதையெல்லாம் ஏற்க வேண்டும். வாழ்க்கைக்கு, நிஜத்துக்கு... அதற்கான நேரத்தைத் தரவேண்டும். நான் படத்தில் நடிப்பது பற்றி சொன்னால், என்ன பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார் என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அது நடக்க வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தேன்.

ஆனால், மணிரத்னம் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும், நான் இப்போது சொல்கிறேன். ஆனால், ஏற்கெனவே சில செய்திகள் வந்துவிட்டன. ஆம், அவரது படத்தில் நடிக்கிறேன். அவரது படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. என் குருவின் படத்தில் நடிக்க நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பேன். இந்த வருடத்தின் கடைசியில்தான் என் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.”

இவ்வாறு ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிலின் மூலம், ’பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர் நடிப்பதும், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in