

ஜே.கே.ரித்தீஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்று இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்
முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஆனால், சில காலத்துக்குப் பின் அதிமுகவில் இணைந்தார். திரையுலகிலும் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் வெற்றிக்காக பெரிதும் உழைத்தவர். தற்போது விஷாலுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன்.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.