Published : 03 Apr 2019 02:28 PM
Last Updated : 03 Apr 2019 02:28 PM

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’: யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால், அது கைகூடவில்லை.

எனவே, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.

அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x