

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கினார் பாலா. 'வர்மா' என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அப்படம் முழுமையாக முடிந்துவிட்டாலும், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் படமே கைவிடப்பட்டது.
முழுமையாக முடிந்து கைவிடப்பட்ட முதல் தமிழ்ப் படமாக 'வர்மா' அமைந்தது. மேலும், அதே படத்தை 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் மீண்டும் உருவாக்கி வருகிறது அதே தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில், பாலாவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. படப்பிடிப்புகாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் முறை குறித்தெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.
தற்போது அக்கதை முழுமையாக முடித்து, அதில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பாலா. பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்', 'அவன் இவன்' படங்களில் ஆர்யாவும், 'பரதேசி' படத்தில் அதர்வாவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இருவரையும் ஒரே படத்தில் இணைந்து இயக்கவுள்ளார்.
இப்படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார் இயக்குநர் பாலா.