பொன்னியின் செல்வன் அப்டேட்: அடுத்த ஒப்பந்தம் விஜய் சேதுபதி அல்லது கார்த்தி

பொன்னியின் செல்வன் அப்டேட்: அடுத்த ஒப்பந்தம் விஜய் சேதுபதி அல்லது கார்த்தி
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் அடுத்த ஒப்பந்தமாகப் போவது விஜய் சேதுபதியா அல்லது கார்த்தியா என்பது விரைவில் தெரியவரும்.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளைக் கொடுக்க இயலுமா என்று தயங்கி வருகிறார் விஜய்சேதுபதி. இதே கதாபாத்திரத்துக்கு கார்த்தியிடமும் பேசியுள்ளது படக்குழு.

படப்பிடிப்பு எப்போது, எத்தனை நாட்கள் தேவை உள்ளிட்ட விஷயங்களை இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முடிவு செய்யவுள்ளார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி அல்லது கார்த்தி இருவரில் யார் கேட்கும் தேதிகளைக் கொடுக்கிறார்களோ, அவர்களை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

’2.0’ படத்தைத் தொடர்ந்து,  இப்படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை மணிரத்னத்திடம் நடத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in