நான் மீ டூவை மதிக்கிறேன்; மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறேன்: பாடகர் கார்த்திக் உருக்கம்

நான் மீ டூவை மதிக்கிறேன்; மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறேன்: பாடகர் கார்த்திக் உருக்கம்
Updated on
2 min read

மீ  டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன் என பாடகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருக்கமான நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.

பாடகர் கார்த்திக் தமிழ், இந்தி, கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இவர் பாடிய பாடல்கள் மிகப் பிரபலம். 

இந்நிலையில் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அதில், "புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை முதலில் பதிவு செய்கிறேன். தேச மக்களோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நீண்ட அறிக்கையின் வாயிலாக கடந்த சில மாதங்களாக என்னை சோதித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் குறித்துப் பேச விரும்புகிறேன்.

என்னைச் சுற்றி எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய விரும்புகிறேன்.  என்னைச் சுற்றிய உலகம் எப்போதுமே மகிழ்ச்சியைப் பரப்புவதாக இருக்க வேண்டும் என விரும்புவேன். என்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதன் காரணமாகவே, இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

அநாமதேய குற்றச்சாட்டுகள் பற்றி..

சமீபகாலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் எனது மனசாட்சிக்கு உண்மையாகவே இருக்கிறேன். நான் இதுவரை எந்த ஒரு நபரையும் மனம் நோகும்படி செய்ததில்லை. யாரையும் அவர்களது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை. நான் வேண்டுமென்றே யாரையும் அசவுகரியமாக உணரவோ அல்லது பாதுகாப்பற்று உணரவோ செய்ததில்லை. கடந்த காலங்களில் எனது செய்கையால் யாராவது வருந்தியிருந்தால் தயை கூர்ந்து அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன். எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன். யாருடைய வாழ்க்கையிலும் என்னால் கசப்புணர்வு இருக்கக் கூடாது.

தனிப்பட்ட பிரச்சினை..
கடந்த சில மாதங்களாக எனது தந்தை மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார். அவரது உடல்நலன் தேற எனது நண்பர்களும் நலன் விரும்பிகளும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

தொழில் ரீதியாக..
எனது தந்தையின் உடல்நிலை காரணமக ஜீ தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. எனது நிலைமையைப் புரிந்து கொண்ட ஜீ தொலைக்காட்சிக்கு நன்றி. அவர்களது அடுத்த சீசன் சரிகமப வெற்றிக்கு வாழ்த்துகள்.

நான் ஒப்பந்தமாகியிருந்த இசை நிகழ்ச்சிகள், பாடல்கள் குறித்த தகவல்கள் எல்லாவற்றையும் விரைவில் இங்கு அப்டேட் செய்கிறேன்.

இறுதியாக எனது இசைக்கும், என் குடும்பத்தினருக்கும் எனது மனைவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடினமான நாட்களில் அவர்கள் துணை நின்றதற்காக நன்றி. எனது விசிறிகளுக்கும், சினிமா நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக என்னைப் படைத்த இறைவனுக்கும் நன்றி. என் மீது தொடர்ந்து அன்பையும் ஆசிர்வாதத்தையும் பொழியும் இறைவனுக்கு நன்றி.

நான் அன்பின் ஒளியாகவும், ஊக்க சக்தியாகவும் இருக்க விரும்புகிறேன். என்னைச் சுற்றிய உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இசை எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகட்டும்

நன்றி. இறை ஆசி உண்டாகட்டும்

உங்கள் கார்த்தி"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மீ டூ சர்ச்சை கிளம்பியபோது பாடகி சின்மயி பாடகர் கார்த்தி குறித்தும் சில காட்டமான பதிவுகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் கார்த்திக் தற்போது தனது மவுனம் கலைத்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in