‘வர்மா’ படம் மீண்டும் எடுக்கப்படும்: இயக்குநர் மாற்றம்; தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

‘வர்மா’ படம் மீண்டும் எடுக்கப்படும்: இயக்குநர் மாற்றம்; தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படம் மறுபடியும் எடுக்கப்பட இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதனை ரீமேக் செய்து வருகின்றனர்.

தமிழில், ‘வர்மா’ என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ வழங்குகிறது.

இந்நிலையில், ‘வர்மா’ படம் திருப்தி அளிக்காததால் மறுபடியும் படத்தை எடுக்க இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘வர்மா’ படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே, நாங்கள் இந்தப் பதிப்பை வெளியிட விரும்பவில்லை. இதற்குப் பதிலாக ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கை நாங்கள் புதிதாகத் தொடங்க இருக்கிறோம். ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உயிரோட்டம் மாறாமல், துருவ்வை மீண்டும் கதாநாயகனாக வைத்து படத்தை மீண்டும் எடுக்க இருக்கிறோம்.

படத்தின் இயக்குநர், நடிக்க இருக்கும் பிற கதாபாத்திரங்கள் குறித்து புதிதாக விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படத்துக்காக நாங்கள் நிறைய பணத்தைச் செலவழித்தோம். இருப்பினும், இப்படத்தைத் தமிழில் காண வேண்டும் என்ற எங்கள் முடிவில் மாற்றமில்லை. நாங்கள் ஓய்வின்றி உழைத்து இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவோம்.

எங்கள் பயணத்துக்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in