Last Updated : 16 Feb, 2019 05:32 PM

 

Published : 16 Feb 2019 05:32 PM
Last Updated : 16 Feb 2019 05:32 PM

‘இளையராஜா சார் மியூஸிக்னுதான் ஒத்துக்கிட்டேன்’ - ‘பயணங்கள் முடிவதில்லை’ பூர்ணிமா ஓப்பன் டாக்

‘புது டைரக்டர் படம்னு ஒத்துக்காம இருந்தேன். ஆனா இளையராஜா சார் மியூஸிக் அப்படிங்கறதால ஒத்துக்கிட்டேன்’ என்று ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடித்தது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்தார்.

இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி தனியார் சேனலில் ஒளிபரப்பானது. இதில் 80-களில் நடித்த கதாநாயகிகள் சிலர், இளையராஜாவுடன் பங்கேற்று கலந்துரையாடினர்.

அப்போது, பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்ததாவது:

'' ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தோட கதையைச் சொல்லி டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன், என்னை நடிக்கச் சொன்னார். அப்போ அவர் புது டைரக்டர். அதனால ‘புது டைரக்டர் படத்துல நடிக்கணுமா’னு ஒரு யோசனை. ஏன்னா, நானே அப்பதான் ஒண்ணு ரெண்டு படங்கள் பண்ணியிருந்தேன். இந்த சமயத்துல, நாமளும் புதுசு டைரக்டரும் புதுசுன்னா ஆடியன்ஸ் யோசிப்பாங்க அப்படி இப்படின்னெல்லாம் ஒரு குழப்பம் இருந்துச்சு.

அப்பதான், கங்கை அமரன் சார் வந்து ‘இது உங்களுக்கு நல்ல கேரக்டர். மியூஸிக்கல் சப்ஜெக்ட். ராஜா சார் மியூஸிக் பண்றாரு. இந்தப் படத்தோட பாடல்கள் எல்லாமே காலம் கடந்து நிக்கும் பாருங்க. தைரியமா நடிங்க. நல்ல பேர் கிடைக்கும்’னு சொன்னாங்க. சட்டுன்னு எனக்குள்ளே ஒரு வெளிச்சம்... ராஜா சார் மியூஸிக்னு தெரியாமப் போச்சே!

ஏன்னா, மலையாளத்துல, நான் நடிச்ச ‘ஓலங்கள்’ படத்துக்கு ராஜா சார்தான் இசை. அதுலயும் ‘தும்பி வா’ பாட்டு பயங்கர பாப்புலர். அதனால, இந்தப் படத்துலயும் பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கும்னு தெரிஞ்சிபோச்சு. உடனே ஆர்.சுந்தர்ராஜன் சாரைக் கூப்பிட்டு, ‘நடிக்கிறேன் சார்’னு சொன்னேன். அதன்படியே, ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் 200 நாள், 300 நாள்னு ஓடுச்சு. பாட்டு எல்லாமே இன்னிக்கும் நிறைய பேரோட காலர் டியூனா இருக்கு. ஆர்.சுந்தர்ராஜன் சார், பிரமாதமா பண்ணியிருந்தார்.

ஆக, ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தை நான் ஓகே சொன்னதுக்கு, ராஜா சார் இசைதான் காரணம்''.

இவ்வாறு பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x