’அரசியலுக்கு போகச் சொன்னது இளையராஜாதான்!’ - இளையராஜா 75 விழாவில் கமல்

’அரசியலுக்கு போகச் சொன்னது இளையராஜாதான்!’ -  இளையராஜா 75 விழாவில் கமல்
Updated on
1 min read

‘என்னை அரசியலுக்குப் போகச் சொன்ன முதல் நபர் இளையராஜாதான்’ என்று இளையராஜா 75 விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா, இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது.

இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:

இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்), அரசியலுக்குப் போயிடாதே என்றார். ஆனால், என்னை அரசியலுக்குப் போங்க போங்க என்று முதலில் சொன்னவர் இளையராஜாதான் என்றார்.

அப்போது உடனே இளையராஜா, ‘உங்களை எப்போ சொன்னேன். அப்ப சொன்னப்ப ஏன் போகலை. எவ்ளோ தாமதமா அரசியலுக்கு வந்திருக்கீங்க’ என்றார். அரங்கில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தார்கள்.

‘நான் நடிகன். ஓரளவு பாடுவேன் அப்படீங்கறதையெல்லாம் வைச்சிக்கிட்டு, நான் பாடுற பாடல்களையெல்லாம் ஓகே சொல்லிட மாட்டார் ராஜா சார். எல்லாம் பாடி முடிச்சதும், ‘ஓகே கமல். நல்லாருக்கு. சரணத்துல நாலாவது வரிலேருந்து கொஞ்சம் பாடிடுங்களேன்’னு சொல்லுவார். சரின்னு பாடுவேன்.

அப்புறம், ‘இது சரியா இருக்கு. ‘ழ’கரம் உச்சரிப்பு, கொஞ்சம் பளிச்சுன்னு வரல. அதை ஒருதடவை சரியாப் பாடிடுங்களேன்’னு சொல்லுவார்.

இப்படி ஒரு பாட்டு சரியா வர்ற வரைக்கும் விடவே மாட்டார். அந்த அளவுக்கு இசைலயும், அவர் எடுத்துட்டிருக்கிற வேலைலயும் பர்பெக்‌ஷனோட உழைக்கக் கூடியவர். ராஜா சாருக்கு என் வாழ்த்துகள்.

இவ்வாறு கமல் பேசினார்.

பிறகு, இளையராஜா இசையில் தான் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’ (சிகப்பு ரோஜாக்கள்), ‘உன்ன விட ஒலகத்தில் ஒசந்தது’ (விருமாண்டி), ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ (குணா) ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார் கமல். ஒவ்வொரு பாடலுக்கும் இசைக்கும் ரசிகர்கள் விசிலடித்து, ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in