

தெலுங்கில் 'பேட்ட' வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள அசோக் வல்லபனேனி பேச்சால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.
ஆனால், இதே தேதியில் தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காமல் திணறி வருகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பேட்ட' படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை அசோக் வல்லபனேனி கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் யூவி க்ரியேஷன்ஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார் அசோக் வல்லபனேனி. மேலும் இவர்களை மாஃபியா என்று கூறி சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றும் பேசினார். இந்த மோசமான பேச்சைத் தாண்டி தில் ராஜுவும், பன்னி வியாஸும் சூழ்நிலை என்ன என்பது குறித்து விளக்கினார்கள்.
இந்நிலையில், 2-வது முறையாக தொலைக்காட்சி நேரலையில் மீண்டும் அசோக் வல்லபனேனி மோசமாகப் பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இந்த முறை குறிப்பிட்ட தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் குறித்து தவறாகப் பேசியதோடு, இந்தத் தயாரிப்பாளர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிற ரீதியில் பேச, இதனால் கடுப்பான நிகழ்ச்சி தொகுப்பாளர், அசோக்கை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார்.
முன்னதாக தயாரிப்பாளர் பன்னி வியாஸ், எந்த தயாரிப்பாளரும் சூழ்நிலை புரியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம் எனக் கூறியிருந்தார். மேலும் 10-ஆம் தேதி வெளியாகும் படங்களின் தேதிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று தில்ராஜு நினைவுகூர்ந்தார்.