மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு தொடர்ந்த வழக்கு: விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு தொடர்ந்த வழக்கு: விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த  வழக்கில் பதிலளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக  செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தன்னைக் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாகக் கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக சிம்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், புதிய படங்களில் தான் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதுதொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in