Published : 20 Dec 2018 04:29 PM
Last Updated : 20 Dec 2018 04:29 PM
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய விஷாலுக்கு எதிராக இன்னொரு குழுவினர் பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட இந்தக்குழுவினர், தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்டதுடன், தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்தனர்.
முதல்வரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, “எங்களுடைய குறைகளையும், நேற்றைய சம்பவம் தொடர்பான விஷயங்களையும் எழுதி மனுவாகத் தமிழக முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம். அதை அவர் படித்துப் பார்த்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். செய்தித்துறை அமைச்சரை சந்தித்து, அவரிடம் இந்த மனுவைக் கொடுத்தோம்.
நேற்று பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மனுவைக் கொடுத்தோம். ‘நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பூட்டிவிட்டோம். சாவியை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னோம். ஆனால், சாவியை நான் வாங்கிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்று அவர் மறுத்துவிட்டார்.
ஆனால், டி.ஆர். என ஒருவரை அனுப்பி, நாளை (இன்று) காலை அங்குள்ள கோப்புகளைப் பதிவாளர் அலுவலகத்துக்கு எடுத்துவந்து, அதைச் சரிபார்த்து, விசாரித்து, நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்பதாக உறுதி கூறினார். அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT