ஆடியன்ஸ் எதிர்பார்ப்பை நான் எப்படி தடுக்க முடியும்? - லோகேஷ் கனகராஜ் கேள்வி!

ஆடியன்ஸ் எதிர்பார்ப்பை நான் எப்படி தடுக்க முடியும்? - லோகேஷ் கனகராஜ் கேள்வி!

Published on

சென்னை: பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நான் எப்படி தடுக்க முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ‘கூலி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “படம் குறித்து எதையும் நான் சொல்லவில்லை. ஆனால் படம் குறித்த பார்வையாளர்களின் உற்சாகம்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறது. இந்த உற்சாகம் இல்லையென்றால் நாங்கள் படம் எடுக்க முடியாது. அதை குறை சொல்லவும் முடியாது. உதாரணமாக, ‘கூலி’ எல்சியூ என்றோ, டைம் டிராவல் படம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் பார்வையாளர்களே அப்படி நினைத்துவிட்டார்கள். நான் கடைசி நேரம் வரை ஒரு ட்ரெய்லர் கூட ரிலீஸ் செய்யவில்லை.

18 மாதங்கள் முடிந்தளவுக்கு அனைத்தையும் மறைத்துதான் வைத்திருந்தேன். ஆனால் ரஜினி படம் இப்படி இருக்கும், லோகேஷ் படம் இப்படி இருக்கும் என்று ஆடியன்ஸ் அதீத உற்சாகத்தில் தினமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி தடுக்கமுடியும். அவர்களின் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சிறப்பு. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையென்றால் நான் முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தினை விமர்சகர்கள் கடுமையாக சாடினார்கள். எனினும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in