

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.
சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).
தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.