சுப்ரமணிக்காக பெல்ஜியம் நாயுடன் பழகிய ஹீரோ!

சுப்ரமணிக்காக பெல்ஜியம் நாயுடன் பழகிய ஹீரோ!
Updated on
1 min read

இயக்குநர் வின்சென்ட் செல்வா கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம், ‘சுப்ரமணி’. இதை அவரின் முன்னாள் உதவியாளர் ராகுல் பரமஹம்சா இயக்குகிறார். எஸ்.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.சவுந்தர்யா தயாரிக்கிறார். பிரனவ், பாலாஜி இணை தயாரிப்பு செய்கின்றனர். அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாகவும் திவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இதுபற்றி வின்சென்ட் செல்வா கூறும்போது, “மனிதனுக்கும் நாய்க்குமான பிணைப்பு என்பது காலங்காலமாகத் தொடர்வது. அகிரா குரோசாவா, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற பிரபலமான இயக்குநர்கள் பலர் தங்கள் படங்களில் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் எனக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதை கிடைத்தது. அதை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். இதில் பல நாடுகளின் பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் பயிற்சிப் பெற்ற ‘பெல்ஜியன் மாலினாய்ஸ்’ வகை நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ரிச்சர்ட் ரிஷி ஒரு மாதம் பழகினார். அதன் பிறகே, அந்த நாய் அவருடன் ஒட்டிக் கொண்டது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in