அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை: விக்னேஷ் சிவன் விளக்கம்

அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை: விக்னேஷ் சிவன் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: புதுச்சேரி அரசு சொத்து ஒன்றை விலைக்கு கேட்ட சர்ச்சை தொடர்பாக இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டார் என்று தகவல் பரவியது. அரசு ஓட்டலை விலைக்கு கேட்டாரா என்று இணையத்தில் பலரும் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதை வைத்து பலரும் மீம்ஸ்களை பகிரத் தொடங்கினார்கள்.

தற்போது இந்தச் சர்ச்சை தொடர்பாக விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். அதில் “புதுச்சேரியில் அரசு சொத்தை வாங்க முயன்றாக பரவி வரும் செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் புதுச்சேரி விமான நிலையத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெற சென்றிருந்தேன்.

அப்போது மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்தேன். அப்போது என்னுடன் வந்த உள்ளூர் மேலாளர், அவருக்கு தேவையான ஏதோ ஒன்றை விசாரித்துள்ளார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து பரப்பிவிட்டார்கள்.

மீம்ஸ்கள், வீடியோக்கள் என காமெடியாக உருவாக்கப்பட்ட அனைத்துமே நன்றாக இருந்தது. ஆனால், அவை தேவையற்றவை. எனவே இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in