மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
Updated on
1 min read

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

2015-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படம் ‘இசை’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து முழுநேர நடிகராக மாறினார். வில்லன் நடிகராக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டடித்ததால் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் என எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இப்போது வில்லனாக நடிப்பதற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.

அதை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். இதனிடையே, ‘கேம் சேஞ்சர்’ வெளியான ஒரு வாரத்தில் தான் மீண்டும் இயக்குநராகும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். ‘கில்லர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, தயாரித்து, நாயகனாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இடம்பெறுவதற்காகவே பிரம்மாண்ட கார் ஒன்றை சொந்தமாக வாங்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அதில் தான் இப்போது படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்கிறார். ‘நியூ’ படத்தின் 2-ம் பாகம் மாதிரி ‘கில்லர்’ இருக்கும் என்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘நியூ’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in