‘‘சிறந்த மனிதரான ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்’’ - சாய்ரா பானு வேண்டுகோள்

‘‘சிறந்த மனிதரான ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்’’ - சாய்ரா பானு வேண்டுகோள்
Updated on
1 min read

மும்பை: 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் அறிவித்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; அவதூறு பரப்ப வேண்டாம் என சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடரபாக சாய்ரா பானு வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நான் இப்போது மும்பையில் உள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அவரிடம் இருந்து பிரேக் எடுக்கவும் அதுதான் காரணம்.

அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என இந்நேரத்தில் யூடியூப் பதிவர்கள், ஊடக நிறுவனங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். அவர் உலகின் சிறந்த மனிதர்; அற்புதமானவர். அவரது பிஸியான வேலைகளுக்கு இடையே அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என நான் இங்கு வந்துள்ளேன். சிகிச்சை பெறுகிறேன்.

அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரை நம்புகிறேன். விரைவில் சிகிச்சை முடிந்து நான் சென்னை திரும்புவேன். அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கி 1992-ல் வெளியான ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்படும் இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வருகிறார்.

‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கில படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தார். இவர், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள், அமீன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு கடந்த வாரம் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in