

கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா). அரசியல் க்ரைம் த்ரில்லர் படமான இதை, ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். வெற்றிமாறன், மணிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கருணாகரன் இதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். எஸ் பிச்சுமணி ஒளிப்பதிவு செய்ய, அஷ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி கருணாகரன் கூறும்போது, ”நாட்டில் நடைபெறும் சில குற்றங்களை செய்தித்தாள்களில் படித்துவிட்டு மறந்து விடுகிறோம். அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால், வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படி, செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாகப் பாதிக்கப்படுகிறது; அதிலிருந்து வெளியில் வர அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதுதான் படம். படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள் மட்டுமே பாக்கி. ஜனவரியில் படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்” என்றார்.