’புறநானூறு’ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகல்: காரணம் என்ன?

’புறநானூறு’ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகல்: காரணம் என்ன?
Updated on
1 min read

‘புறநானூறு’ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகியிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் ‘புறநானூறு’. இதனை சுதா கொங்காரா மற்றும் அருண் விஸ்வா இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். ‘புறநானூறு’ படத்தினை ஆகாஷ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ள இன்னொரு கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்தார். இதற்காக லுக் டெஸ்ட் எல்லாம் நடைபெற்றது.

ஆனால், தற்போது இதிலிருந்து விலகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். காரணம் ‘கூலி’ படப்பிடிப்பு என்கிறார்கள். இது குறித்து விசாரித்த போது, “‘கூலி’ படப்பிடிப்பு முடிவடைய ஜனவரி இறுதியாகிவிடும். ஒட்டுமொத்த பணிகளும் முடிய ஜூன் மாதம் வரை ஆகிவிடும். ஆனால், அதற்கு முன்னதாகவே ‘புறநானூறு’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இதனால் தான் லோகேஷ் கனகராஜ் விலகியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி முதலில் டிசம்பரில் தொடங்குவதாக இருந்த ‘புறநானூறு’ படப்பிடிப்பு, இப்போது அடுத்த ஆண்டு தான் தொடங்கவுள்ளது. ஏனென்றால் ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்கு பின்பு சிபி சக்கரவர்த்தி படத்தைத் தொடங்குவார். இந்த இரண்டையும் முடித்த பின் தான் ‘புறநானூறு’ தொடங்கும் என தெரிகிறது” என்று தெரிவித்தார்கள்.

இப்போது லோகேஷ் கனகராஜ் விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக அதர்வாவிடம் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இது அவருடைய இசையில் உருவாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in