‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ - விஜய் அறிவிப்புக்கு பா.ரஞ்சித் வரவேற்பு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய் அறிவிப்புக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்பு அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் தலைவர் விஜய் கொடி ஏற்றினார். பின்னர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் பேசும் போது பல்வேறு விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். அதில் “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி மத வர்க்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
