ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு: சிங்கமுத்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு: சிங்கமுத்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டிய நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், “இந்த வழக்கில் வக்காலத்து தாக்கல் செய்யவும், பதிலளிக்கவும் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரினார். அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in