Published : 06 May 2024 12:40 PM
Last Updated : 06 May 2024 12:40 PM

பாக்தாத் திருடன்: எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா சேர்ந்து நடித்த ஒரே படம்!

சாகச நாயகர்களைக் கொண்ட ஐரோப்பிய இலக்கியத்தின் ஒரு வகையை ஸ்வாஷ்பக்ளர் (Swashbuckler) என்பார்கள். திறமையான, துணிச்சலான, வாள் சண்டைகள், வீரதீர சாகசங்களைச் செய்கிற ஹீரோ கதாபாத்திரங்களை உள்ளடக்கிய திரைப்படங்களை இந்த வகைக்குள் அடக்குவது உண்டு. துன்பத்தில் இருக்கும் பெண்களைக் காப்பாற்றுவது, அவர்களின் மானத்தைக் காக்க, பழிவாங்க முயல்வதையும் இணைத்த, இந்த ஸ்வாஷ்பக்ளர் வகை படங்களில் ரொமான்ஸுக்கும் இடம் இருக்கிறது. 1920-ல் வெளியான அமெரிக்க மவுன படமான, தி மார்க் ஆஃப் ஜாரோ, த த்ரி மஸ்கடியர்ஸ் (1921), தி அயர்ன் மாஸ்க் (1929) உட்பட பல படங்களை இந்த வகைக்குள் அடக்குவார்கள்.

தமிழிலும், இந்த ஜானரில் பல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் ஒன்று, ‘பாக்தாத் திருடன்’. 1924-ல்வெளியான ‘தி தீஃப் ஆஃப் பாக்தாத்’ என்ற அமெரிக்கப்படத்தின் தழுவல் இது. இதில், எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா, சந்தியா, எம்.என்.ராஜன், நம்பியார், டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், எஸ்.என்.லட்சுமி, சந்தியா உட்பட பலர் நடித்தனர்.

நாட்டின் அரசனும் அரசியும் துணைத் தளபதியின் வஞ்சகத்தால் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் மகன் அபு, குழந்தையாக இருக்கிறான். அவனை பசுக்கூட்டத்துடன் தப்ப வைக்கிறார்கள். குழந்தையை பார்க்கும் திருடர்கள் கூட்டம், எடுத்து வளர்க்கிறது. வளர்ந்து ஆளாகும் அபு (எம்.ஜி.ஆர்) திருடர் கூட்டத்தலைவனாகிறான். இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் அவன், கொடுங்கோல் ஆட்சி நடத்தும் போலி அரசனை வீழ்த்தி எப்படி வெல்கிறான் என்பது கதை. சதர்ன் மூவிஸ் சார்பில் ஹரிலால் பட்டேவியாவுடன் இணைந்து டி.பி.சுந்தரம் தயாரித்தார். திரைக்கதையை ரவீந்தர் அமைக்க, கதை, உரையாடலை ஏ.எஸ்.முத்து எழுதினார். டி.பி.சுந்தரம் இயக்கிய இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசை அமைத்தார்.

‘யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறே’, ‘அறியா வயசு அதுவும் புதுசு’, ‘சொக்குதே மனம்’, ‘புல் புல் பார்வையிலே’, ‘உண்மை அன்பின்உருவாய்’, ‘சிரிச்சா போதும் சின்னஞ்சிறு பொண்ணு’, ‘வெற்றிக்கொள்ளும் வாளேந்தி’,‘எந்தன் கதை இதனா, இருள் சூழ்ந்த வாழ்வுதானா’, ‘கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா’என பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. இதில் ‘யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பார்க்கிறே?’ பாடல் சூப்பர் ஹிட்டானது.

வைஜெயந்தி மாலாவை ‘ஆடல் அழகி’ என்ற பட்டத்துடன் டைட்டில் கார்ட்டில் போட்டிருந்தார்கள். இந்தி நடிகை ஹெலன், பத்மினிப் பிரியதரிசினி, கோபிகிருஷ்ணா ஆகியோரின் நடனங்களும் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர்., வைஜெயந்திமாலா சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.

முக்கிய வேடத்தில் நடித்த எஸ்.என்.லட்சுமி ஒரு காட்சியில் ‘டூப்' போடாமல் புலியுடன் மோதினார். அப்போது, ‘இந்தப் படத்தின் கதாநாயகன் நானா அல்லது இந்த இளம் பெண்ணா?’ என எம்.ஜி.ஆர். கிண்டலாகச் சொன்னாராம். இதில் டி.எஸ்.பாலையா ஜோடியாக ஜெயலலிதாவின் தாய் சந்தியா நடித்திருந்தார்.

‘யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறே’ பாடலில் எம்.ஜி.ஆரின் மாறுவேடத்தை அடையாளம் காண முடியாதபடி பண்ணியிருப்பர்கள். 1960-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், இஸ்லாமியராக எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களில் ஒன்று. எம்.ஜி.ஆருடன் அசோகன்நடித்த முதல் படமும் இதுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x