Published : 29 Apr 2024 03:34 PM
Last Updated : 29 Apr 2024 03:34 PM

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், 2000 - 2006-ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உப தலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கட்டிடம்: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரூ.1 கோடியும், நடிகர் விஜய் ரூ.1 கோடியும் நிதியுதவி வழங்கினர். சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது நடிகர் நெப்போலியன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இதனிடையே, கடந்த ஏப்.22 தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கின. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x