Published : 29 Apr 2024 11:51 AM
Last Updated : 29 Apr 2024 11:51 AM

படப்பிடிப்பில் காதலில் விழுந்த ஹீரோ, ஹீரோயின்!

தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் சில புராணக் கதைகளும் வரலாற்றுக் காதல் கதைகளும் அடிக்கடி படமாக்கப்பட்டிருக்கின்றன. கதை, ஒன்றென்றாலும் படமாக்கிய விதத்திலும் நடிப்பிலும் ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான தனித்தன்மை இருக்கிறது. அப்படி உருவான கதைகளில் ஒன்று, தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகான் - இளவரசி சம்யுக்தாவின் காதல் கதை.

தமிழ் சினிமாவில் இந்தக் கதையை முதலில் எழுதி இயக்கியவர், பி.சம்பத்குமார். மைசூரைச் சேர்ந்த இவர், தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த ‘சத்திய சீலன்’ (1936) படத்தை இயக்கியவர்.

ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள், கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனும், தில்லி பேரரசர் பிருத்விராஜ் சவுகானும். ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவும் பிருத்விராஜும் காதலிக்கிறார்கள். காதலை ஏற்க மறுக்கும் மன்னன் ஜெயச்சந்திரன், சம்யுக்தாவுக்குச் சுயம்வரம் நடத்துகிறார். அதற்கு பிருத்விராஜை தவிர மற்ற இளவரசர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். பிருத்விராஜை அவமானப்படுத்தும் விதமாக சுயம்வரம் நடக்கும் அரண்மனை மண்டப நுழைவாயிலில் அவர் சிலையை நிறுவுகிறார். கோபம் கொண்ட பிருத்விராஜ், சம்யுக்தாவை கடத்திச் சென்று, திருமணம் செய்வதுதான் கதை.

‘பிருதிவிராஜன்’ என்று பெயரிடப்பட்ட இதில் நாயகனாக பி.யு.சின்னப்பாவும் சம்யுக்தாவாக ஏ.சகுந்தலாவும் நடித்தனர். சகுந்தலா, ‘சகுந்தலை’ (1940) படத்தில் சிறிய வேடத்திலும் ‘மனோன்மணி’ படத்தில் நாயகியின் தோழியாகவும் நடித்திருந்தார்.

டி.எஸ்.பாலையா, டி.எம்.ராமசாமி பிள்ளை, எம்.ஆர்.சந்தானலட்சுமி, எஸ்.டி.சுப்பையா, ஜி.எம்.பஷீர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.மதுரம், காளி எம்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் நடித்தனர்.

ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஏ.நடராஜன், வேலுசாமி கவி பாடல்களை எழுதினர். இதில், பாரதியின் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாடல், சின்னப்பாவின் குரலில் இடம்பெற்றாலும் பாரதி பெயர் பயன்படுத்தப்படவில்லை. அப்போது பாரதி பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் அவர் பெயரை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதைக்காக, காதல் வளர்த்த பி.யு.சின்னப்பாவும் ஏ.சகுந்தலாவும் இதன் படப்பிடிப்பின்போது நிஜமாகவே காதலில் விழுந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ஏ.சகுந்தலா நடிக்கவில்லை. 1942-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதே கதை, 1962-ம் ஆண்டு ‘ராணி சம்யுக்தா’ என்ற பெயரில் மீண்டும் உருவானது. எம்.ஜி.ஆரும் பத்மினியும் நடித்தனர். யோகானந்த் இயக்கினார். இதுவும் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘சாம்ராஜ் பிருத்விராஜ்’ என்ற பெயரில் இதே கதையை உள்ளடக்கிய சில திரைப்படங்கள் இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x