குரங்கு பெடல் படத்தை சிவகார்த்திகேயன் வழங்குவது ஏன்?

குரங்கு பெடல் படத்தை சிவகார்த்திகேயன் வழங்குவது ஏன்?
Updated on
1 min read

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கமலக்கண்ணன் கூறும்போது, “ சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90 களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும்படம் என்றாலும் அந்தக் காலகட்டத்தை நினைவுபடுத்தும் படமாகவும் இது இருக்கும்.

காவேரி கரையோரத்தில் கத்தேரி என்ற கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான தொடர்பை இந்தப் படம் கொடுக்கும். பல்வேறு பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் வழங்குகிறார். படத்தைப் பார்த்து பாராட்டிய அவர், தானே வழங்குவதாக அறிவித்தது மகிழ்ச்சியானது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in