Published : 16 Feb 2024 07:16 PM
Last Updated : 16 Feb 2024 07:16 PM

மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்: உறுதி செய்த ‘அமரன்’ டீசர்

சென்னை: ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘அமரன்’ படம் உருவாகியுள்ளதை அதன் டீசர் உறுதி செய்துள்ளது. குறிப்பாக டீசரில் சிவகார்த்திகேயனின் பெயருக்கு ‘முகுந்த் வி’ என தனித்து காட்டப்படுகிறது. மேலும் முகுந்த் வரதராஜன் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றினார். இதைத்தான் டீசரில் சிவகார்த்திகேயன் வசனமாக பேசியிருந்தார். யார் இந்த முகுந்த் வரதராஜன் என்பது குறித்து பார்ப்போம்.

யார் இந்த முகுந்த் வரதராஜன்?: 1983-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார் முகுந்த். சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடிந்தவர், தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலையில் இதழியல் பட்டம் பெற்றவர். உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருப்பதால் தானும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் ராணுவ அதிகாரியானார்.

2006-ம் ஆண்டு ராஜ்புத் ரெஜினிமென்டில் லெப்டினென்டாக நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். மத்தியப் பிரதேசத்தில் மோவ் நகரில் உள்ள காலாட்படை பள்ளியில் பணியாற்றினார். லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் மிஷனின் ஒரு பகுதியாகவும் இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான ஷோபியான் என்ற இடத்திற்கு மேஜராக அனுப்பப்பட்டார். இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடம் ஒன்று பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டது. மக்களை மீட்கும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிய முகுந்த் கனகரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என கூறி, நண்பர் சிப்பாய் விக்ரம் சிங்குடன் இணைந்து கட்டிடத்தை நோக்கி முன்னேறினார். இதில் நடந்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் முகுந்த்தின் நண்பர் விக்ரம் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது நண்பர் உயிரிழந்த கோபத்தில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட முகுந்த் அங்கிருந்த பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார்.

“எல்லாம் முடித்துவிட்டு அவர் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார். நன்றாக இருப்பதாக தெரிந்தார். நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்” என அந்த குழுவில் இருந்தவர்கள் தெரிவித்தனர். 3 தோட்டக்கள் அவரது உடலில் பாய்ந்திருத்து. இதையடுத்து முகுந்த் ஸ்ரீநகரில் உள்ள 92 Base மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் உயிரிழந்தார்.

31 வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக இன்னுயிர் தந்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x