Published : 25 Jan 2024 06:52 PM
Last Updated : 25 Jan 2024 06:52 PM

டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? - விவரம் தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

அப்போது ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "காவல்துறையின் இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும். நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக காவல் துறை அந்த தேதியில் காவல் துறை முன்பு ஆஜரானதாக கூறுவது தவறு" என்று கூறியிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12-ம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிளை சமர்பித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 13-ம் தேதிதான்அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை என தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x