தமிழக மக்களுக்கு கவுரவம்: பத்ம விபூஷண் விருது குறித்து இளையராஜா கருத்து

தமிழக மக்களுக்கு கவுரவம்: பத்ம விபூஷண் விருது குறித்து இளையராஜா கருத்து
Updated on
1 min read

மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன் என்று பத்ம விபூஷண் விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இசைத் துறை சாதனைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இளையராஜா கூறியதாவது:

மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறை அலுவலகத்தில் இருந்து பத்ம விபூஷண் விருது கொடுப்பதற்கான ஒப்புதலுக்காக கேட்டனர். ஒப்புதல் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்தேன். அப்போது செய்தி தொடர்புத் துறையைச் சேர்ந்த இணைச் செயலாளர், ‘இந்த விருதுக்கு இதன் மூலம் கவுரவம் அடைகிறது’ என்றார்.

இதன் வாயிலாக மக்கள் என் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன்.

இவ்வாறு இளையராஜா தெரிவித் தார்.

கமல், ரஜினி வாழ்த்து

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவுக்கு கலையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன்: எனக்கு மூத்தவரான இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை அவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவுக்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்: இசைக் கடவுள் இளையராஜாவுக்கு தேசத்தின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இது நம் அனைவருக்கும் பெருமைமிகு தருணமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in