Published : 18 Oct 2023 05:32 PM
Last Updated : 18 Oct 2023 05:32 PM

‘லியோ’வில் வசனம் மியூட் முதல் ‘எல்சியூ’ பிரச்சினை வரை: லோகேஷ் கனகராஜ் விளக்கம்

சென்னை: ‘‘லியோ’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்து நடிகர் விஜய் கட்டிப்பிடித்து நன்றி கூறினார்” என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “படம் குறித்த அழுத்தம் என்பது கதை எழுதும்போதும், படப்பிடிப்பின்போதும் எனக்கு இருந்தது கிடையாது. கடைசி 15 நாட்களில் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என நிலையில்தான் அழுத்தம் இருக்கும். ஐமேக்ஸில் வெளியிட வேண்டும் என்ற திட்டம் இல்லை. இறுதியில் அதற்கான தயாரிப்பு பணிகளும் இருந்தன. ‘லியோ’ படம் நிகழ காரணமே ‘மாஸ்டர்’ தான். அதன் வெற்றி தான் இந்தப் படம் நடக்க காரணமாக இருந்தது. 100சதவீதம் இது உங்கள் படமாகவே இருக்க வேண்டும் என விஜய் சொன்னார். அவர் கொடுத்த சுதந்திரம் தான் படம் விரைவில் உருவாக காரணம்” என்றார்.

விஜய் படம் என்றாலே பிரச்சினை வருகிறதே.. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மாஸ்டர் படத்திலிருந்தே அந்தப் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்தது. யாரோ ஒருவருக்கு மன வருத்தம் ஏற்பட்டு விடுகிறது. உதாரணமாக, ட்ரெய்லரில் வந்த வார்த்தை சர்ச்சையாக மாறியது. அந்த வார்த்தைக்கு முழுக்க முழுக்க நானே காரணம். விமர்சனத்துக்குப் பிறகு படத்தில் அந்த வார்த்தைக்கு ம்யூட் போட்டுவிட்டோம். ஒருவேளை அந்த வார்த்தை இல்லாவிட்டாலும் வேறு வடிவில் பிரச்சினை வந்திருக்கும். அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனம்தான் அது. மற்றபடி நடிகர் விஜய் அதை பேசவில்லை. குழந்தைகள் பார்ப்பார்கள் என்பதால் அதனை ம்யூட் செய்துவிட்டோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “உதயநிதி தனது ட்வீட்டில் எல்சியூவுக்கு அருகில் கண்அடிக்கும் எமோஜியை பகிர்ந்திருக்கிறார். அதனால் படம் எல்சியூவில் வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்சியூ உருவாக்குவதில் நிறைய சட்ட பிரச்சினைகள் உண்டு. அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான ஒப்புதல்களை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும். இதையெல்லாம் கடந்து யூனிவர்ஸை உருவாக்க வேண்டியுள்ளது.

ஆனால், தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாறியிருக்கிறது என நினைக்கிறேன். நடிகர்களும் மாற்றத்தை விரும்ப ஆரம்பித்துள்ளனர். ஓடிடியில் எல்லாவற்றையும் பார்த்துவிடுகிறோம். அதையும் மீறி திரையரங்குக்கு பார்வையாளர்களை கொண்டு வரும் முயற்சிகள்தான் இவை.

போதைப்பொருட்கள் வேண்டாம் என ஹீரோ சொல்வதுதான் படம். அதனால், போதைப்பொருள் உபயோகம் வேண்டாம் என்பதுதான் படத்தின் குறிக்கோள். ஆக்‌ஷன் என்பது ஒரு வகை ஜானர். சர்ப்ரைஸாக யாரும் திரையரங்குகளுக்கு வரப்போவதில்லை. படம் இதனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லிவிடுகிறோம். அதன்படிதான் பார்வையாளர்கள் வருகிறார்கள். குடும்பப் படம் என்று நினைத்து யாரும் வரபோவதில்லை.

அடுத்து வரும் ரஜினியின் படம் இந்த வகை ஜானரில் இருக்காது. அது முற்றிலும் வேறு வகையில் இருக்கும். படம் எடுப்பது தான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். திரையரங்கில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டுகள் இருக்கும் விஷயம். இன்று 7 மணிக்குள் எல்லாம் சரியாகும் என நம்புகிறேன்.

விஜய் ‘லியோ’ படத்தை பார்த்து கட்டிப் பிடித்து நன்றி கூறினார். ‘மாநகரம்’ போன்ற படத்தையும் இயக்குவேன். ஆனால், இந்த கமிட்மென்டுகளில் இருப்பதால் தற்போது இயக்க முடியவில்லை. இந்த பெரிய மார்கெட் படங்களிலும் எனக்கு பெரிய ஈடுபாடுகள் இல்லை” என்றார் லோகேஷ் கனகரஜ். நடிகர் அஜித்குமாரை வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு, “நடிகர் அஜித்தை வைத்து படம் எடுக்க எனக்கு மிகவும் ஆசை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x