“ஷூட்டிங் வராமல் எங்கே போவேன்?” - வதந்திகளுக்கு யோகிபாபு முற்றுப்புள்ளி

“ஷூட்டிங் வராமல் எங்கே போவேன்?” - வதந்திகளுக்கு யோகிபாபு முற்றுப்புள்ளி

Published on

சென்னை: “நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன்” என நடிகர் யோகிபாபு பேசியுள்ளார்.

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள படம் ‘லக்கிமேன்’. இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் பாலாஜி சொன்னது போல இந்தப்படம் என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலைந்து காட்சிகள் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை.

நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in