Published : 04 Jul 2023 08:57 PM
Last Updated : 04 Jul 2023 08:57 PM

“என்ன ஓர் அற்புதமான பயணம்” - ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு குறித்து விக்ரம் 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு நிறைவடைந்தது. என்ன ஓர் அற்புதமான பயணம். அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றினேன். ஒரு நடிகராக உற்சாகமான பல அனுபவங்களை பெற்றேன். முதல் புகைப்படத்துக்கும் கடைசி படத்துக்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இடைவெளி. ஒவ்வொரு நாளும் இந்த பெருங்கனவில் வாழ வைத்ததற்கு நன்றி பா.ரஞ்சித்” என பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த மேமாதம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரம் காயமடைந்தார். அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமடைந்தார். இதற்கிடையே அவர் லண்டன் சென்று திரும்பினார். இதையடுத்து கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ‘தங்கலான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தற்போது மொத்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 118 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x