‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள்: சசிகுமார் நெகிழ்ச்சி

‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள்: சசிகுமார் நெகிழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இப்படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'சுப்ரமணியபுரம்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தப் படம் இன்றுடன் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு படம் வந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மக்களுடைய ஆதரவு மட்டுமே. மக்களுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த படம் வந்தபோது மக்கள் அதை தோளில் வைத்துக் கொண்டாடவில்லை. தலையில் வைத்து கொண்டாடினார்கள். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். இந்த 15 ஆண்டுகளில் சினிமாவில் நல்லது கெட்டது என பல விஷயங்களை அனுபவித்துக் கடந்து வந்துள்ளேன். இந்த மறக்கமுடியாத நினைவுகளைக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் ‘சுப்ரமணியபுரம்’ என்ற அந்த முதல் படம்தான். இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in