

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவரின் அறிவுரையை ஆதரித்துள்ள இயக்குநர் மோகன்.ஜி, “இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்டக் கூடாது. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, “கல்லூரி மாணவிகள் டிபி-யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இந்த அறிவுரையை மேற்கோள் காட்டி இயக்குநர் மோகன்.ஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படும். இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்டக் கூடாது. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும். பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி...” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.