

சென்னை: கரண் நடித்த ‘காத்தவராயன்’, கதிர் நடித்த ‘கந்தர்வன்’, கஸ்தூரி நடித்த ‘இ.பி.கோ 302’ படங்களை இயக்கியவர் சலங்கை துரை. இவர் இப்போது இயக்கியுள்ள படம், ‘கடத்தல்’. பிஎன்பி கிரியேஷன்ஸ், பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க, சவுத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா, சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் இசை அமைத்துள்ளார்.
படம்பற்றி சலங்கை துரை கூறும்போது, “உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு காமெடி, கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஓர் இளைஞனின் கதை இது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்தப் படம் நிச்சயம் பாடமாக இருக்கும். ஜூலையில் படம் வெளியாகிறது” என்றார்.