

தனது பேட்டியால் உருவான சர்ச்சைக்கு, ‘தி ராஜா சாப்’ தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தி ராஜா சாப்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் உரிமைகள் விற்பனையில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக இதன் ஓடிடி உரிமையினை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இதனிடையே ‘தி ராஜா சாப்’ தயாரிப்பாளர் விஸ்வ பிரசாத் அளித்த பேட்டியொன்றில், “’தி ராஜா சாப்’ திரைப்படம் திரையரங்க உரிமைகள் அல்லாத இதர உரிமைகள் விற்பனையில் எதிர்பார்த்த தொகை வரவில்லை. அதனால் பிரச்சினையில்லை. தற்போது திரையுலக சந்தை சரிவை சந்தித்து வருகிறது. அதனை ஏற்றுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதர நடிகர்களின் ரசிகர்கள் இந்தப் பேச்சை முன்வைத்து இணையத்தில் விவாதிக்கத் தொடங்கினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஸ்வ பிரசாத் தனது எக்ஸ் தளத்தில், “எங்களின் மிகப்பெரிய படத்தின் வியாபாரம் குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எங்கள் படத்தின் செலவுகள் அல்லது பண விஷயங்களை பொதுவெளியில் விவாதிப்பதில்லை. இப்படம் வெளியான பிறகு உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை நாங்களே அதிகாரபூர்வமாக பகிர்வோம்.
சினிமா பல்வேறு காலகட்டங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்று திரையரங்குகள் சாராத சந்தை ஒரு இயல்பான சரிவை சந்தித்து வருகிறது. அதே சமயத்தில், திரையரங்குகள் வசூலில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் கூட திரையரங்குகள் சாராத வியாபாரத்தில் நல்ல மதிப்பையே பெற்றுக்கிறோம். தற்போது வரும் ஓப்பீடுகள் தேவையற்றவை என கருதுகிறேன்.
‘தி ராஜாசாப்’ திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான திகில் கலந்த கற்பனைப் படமாகும். கண்டிப்பாக அப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.