

மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ வரிசை படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இதில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் மோகன்லால், ரசிகர்களுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தார். படத்துக்குக் கிடைத்த ரசிகர்களின் வரவேற்பைக் கண்டு மோகன்லால் நெகிழ்ந்து உணர்ச்சி வசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. இதையடுத்து இப்படத்தில் தனது கதாபாத்திரமான ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், “த்ரிஷ்யம் 3 திரைப்படம் அர்ப்பணிப்புடனும், அன்புடனும், நன்றியுணர்வுடனும் உருவாக்கப்பட்டது. அதற்குப் பதிலாக நீங்கள் பொழியும் பேரன்பைக் கண்டு நெகிழ்கிறேன். உங்களின் விமர்சனங்களும், நெஞ்சார்ந்த வார்த்தைகளும், நீங்கள் பகிர்ந்த உணர்வுகளும் எந்த வசூலையும் விட எனக்கு மிக உயர்ந்தவை. படத்தைக் கண்டு ரசித்ததற்கும், அதன் ஒவ்வொரு தருணத்தோடும் உங்களை இணைத்துக் கொண்டதற்கும், ஜார்ஜ்குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்களுடையவர்களாகவே ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.