

‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின்போது ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஹைதராபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 2024-ம் ஆண்டு டிச. 4-ல் நடைபெற்றது. அப்போது அல்லு அர்ஜுனைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அங்கு நடந்த தள்ளு முள்ளுவில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரது மகன் ஸ்ரீதேஜா பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தால் அல்லு அர்ஜுன் அப்போது கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கு குறித்து திரையரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள், அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் என மொத்தம் 23 பேர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 19 பேருக்கு நாம்பல்லி நீதிமன்றம் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. இதில் 11-வது குற்றவாளியாக அல்லு அர்ஜுன் சேர்க்கப்பட்டுள்ளார்.