

ஜெயசூர்யா, ரித்திகா சிங் நடிக்கும் பான் - இந்தியா திரைப்படம் ‘ஆபரேஷன் டிரால்’. இதில் முரளி ஷர்மா, காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படத்தை ரதீஷ் வேகா இயக்குகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் புலனாய்வு த்ரில்லர் திரைப்படமான இது, காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
தேசப்பற்றை மையமாகக் கொண்ட இப்படத்தில் இருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஜெய் ஹோ’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடல் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை நினைவூட்டினாலும் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.