

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப். 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர்.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தும்மன்பேட்டுக்கு சென்றார். திருமணத்துக்குப் பிந்தைய பூஜைகளில் கலந்து கொண்ட அவர்களுக்கு, உள்ளூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், அம்மாவட்டத்தில் உள்ள 44 அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.