

நடிகர் ராம் சரண் இப்போது ‘பெத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா வெளியீடாக உருவாகியுள்ள இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதையடுத்து அவர் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
திரை எழுத்தாளர் கே.வி.விஜயேந்திர பிரசாத், இதன் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு துர்கேஷ் சிங் புதிய திரைக் கதையை வடிவமைத்துள்ளார். இக்கதை வரலாற்று காலத்தை பின்னணியாகக் கொண்ட, வன சாகசத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதன் திரைக்கதை ராம் சரணின் நடிப்பு மற்றும் தனித்துவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை முன்னணி பாலிவுட் இயக்குநர் ஒருவர் இயக்குவார் என்கிறார்கள். இந்தியில் தயாரிக்கப்படும் இப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் டப் செய்யப்பட இருக்கிறது.