

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் திரைப்படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் ஃபேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இப்படம், 2027ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாகிறது. இதன் முக்கியமான காட்சிகள் கென்ய காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்திய சினிமா என்று இதைச் சொல்கிறார்கள். ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ வெளி நாடுகளிலும் வரவேற்பைப் பெற்றது. அவர் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர் ‘படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து ‘வாரணாசி’ படத்துக்குச் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்துக்காகப் போடப்பட்ட வாரணாசி கோயில் மற்றும் அந்நகரத்தின் பிரம்மாண்ட செட் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், பிரம்மாண்டம் காரணமாக, இப்படத்தின் கதையைச் சொல்ல 3 மணி நேரம் போதாது என்பதால் 2 பாகங்களாகப் படத்தை வெளியிட ஆலோசித்து வருகின்றனர்.
“துரந்தர் படத்தை 2 பாகமாக வெளியிட்டதை போல ராஜமவுலியும் ‘வாரணாசி’ படத்தை 2-ஆகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளார். வசூலுக்காகக் கதையைச் சிதைக்காமல், முழுமையான விரிவாக கதையைச் சொல்வதற்காக அப்படி முடிவு செய்துள்ளார். இப்படத்தின் கதையை 3 மணி நேரத்துக்கு மேல் சொல்ல வேண்டும் என்பதால் பரிசீலித்து வருகின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.