இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய குடியரசுத் தலைவர்
Updated on
1 min read

புதுடெல்லி: இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ் ரீவிருது வழங்கி கவுரவித்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகரும், கர்நாடக இசைக்கலைஞருமான வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டது.

இவரை தவிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், சமூகசேவகர்களும், பாம்புப் பிடி வீரர்களான வடிவேல் கோபால்-மாசி சடையன், பரதநாட்டியக் கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உள்ளிட்ட 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த மார்ச் 22-ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், இன்றும் பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். கீரவாணிக்கு அண்மையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்து குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in