ஆஸ்கருக்கு தரமற்றப் படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கருக்கு தரமற்றப் படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல வயலின் இசைக் கலைஞர், எல். சுப்பிரமணியத்துடன் நடத்திய உரையாடலில், இந்தியா சார்பில் ஆஸ்கருக்குத் தகுதியற்றப் படங்கள் அனுப்பப்படுவதாகக் கூறியுள்ளார். இந்த உரையாடல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தாலும் இப்போது அது வேகமாக பரவி வருகிறது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:

நான் தொழில்நுட்ப மாற்றத்தின் இடைக்காலத்தில் இசைத் துறைக்கு வந்தேன் என்பதால் பரிசோதனை செய்து தோல்வியடைய எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எனது தோல்வி, யாருக்கும் தெரியாது. எனது வெற்றியை மட்டுமே பார்த்தார்கள். ஏனென்றால் என் தோல்விகள் ஸ்டூடியோவிற்குள் நடந்தது. நாங்கள் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தோம். ஹோம் ஸ்டூடியோ வைத்திருப்பதால் கிடைத்த சுதந்திரம் அது. இந்த ஸ்டூடியோ எனக்கு பரிசோதனை செய்வதற்கான சுதந்திரத்தை அளித்தது.

நம் திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்வதைப் பார்க்கிறேன். ஆனால் வெற்றி பெறுவதில்லை. தகுதியற்றப் படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன. அதைப் பார்க்கும்போது அனுப்ப வேண்டாம் எனத் தோன்றும். சில நேரங்களில் மூன்றாவது நபர்கள் மூலம் தான் இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படியில்லாமல் ஆஸ்கருக்கு படங்களைத் தேர்வு செய்யும் முறை வெளிப்படையாக நடக்க வேண்டும். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in