`ரியல் ஹீரோக்களின் கதை' - கேரள பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் `2018' டீசர்

`ரியல் ஹீரோக்களின் கதை' - கேரள பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் `2018' டீசர்
Updated on
1 min read

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 483 உயிர்கள் இந்த வெள்ளத்தால் பறிபோயின. பலர் காணாமல் போனார்கள். கேரளத்தின் 14 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. ''ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம்' ஆக இது அமைந்தது. 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று இந்திய அரசு இதை அறிவித்தது.

அந்த பெருமழையானது பல்வேறு காலநிலை மாற்றங்களை உலகுக்கு எச்சரித்த அதேவேளையில் வெள்ளத்தில் சாதி, மதம் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டன. இந்த மனிதாபிமான நிகழ்வுகளையும் கேரள பெருவெள்ள துயரையும் நியாபகப்படுத்தும்விதமாக கேரள வெள்ளம் திரைப்படமாக தயாராகியுள்ளது. குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நஸிமுக்கு `ஓம் சாந்தி ஒஷானா' படத்தின் மூலம் பிரேக் கொடுத்த இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார்.

2018ம் ஆண்டே இப்படம் எடுக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியானாலும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் படம் தயாராவதில் தாமதம் ஏற்பட்டது. என்றாலும், இந்தப் படத்தின் படிப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் 2018 கேரள வெள்ளத்தின் கோரத்தை நினைவுபடுத்துகிறது.

படம் குறித்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகளுக்கு முன்பு, 2018 அக்டோபர் 16, இந்த திரைப்படத்தை அறிவித்தேன். ஜாதி, மதம், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் மலையாளிகள் எப்படி ஒன்றிணைந்து வெள்ளத்தை எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய ஒரு பெரிய படம். கதையைக் கேட்டவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. சில படக்குழுவினர் படத்தின் படப்பிடிப்பு சாத்தியமில்லை என்று கூறினர். என்னுடைய சக எழுத்தாளர் அகில் பி தர்மஜன் மட்டுமே என் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாட்கள் கடந்தன. கரோனா பெருந்தொற்று வர, படத்தை அனைவரும் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. இந்த கனவு திட்டத்தை கைவிட நான் மறுத்துவிட்டேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in