Published : 08 Oct 2022 11:26 PM
Last Updated : 08 Oct 2022 11:26 PM

“மக்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” - ‘காட்ஃபாதர்’ வெற்றியால் நெகிழும் நயன்தாரா

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியாகும். இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், படம் ரூ.100 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காட்ஃபாதரை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியதற்காக அனைத்து திரைப்பட ஆர்வலர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் திரையரங்கில் எங்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. காட்ஃபாதர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம், இதற்குக் காரணம் அதன் அற்புதமான குழு.

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் மீண்டும் ஒருமுறை திரையுலகைப் பகிர்ந்து கொள்வது ஒரு பாக்கியம். அவருடன் படப்பிடிப்பில் ஒவ்வொரு நொடியும் என்னை மேம்படுத்தி கொண்டேன். தொடர்ந்து என்னை நம்பி மூன்றாவது முறையாக வாய்ப்பளித்த மோகன்ராஜாவுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள 'சத்யபிரியா' பாத்திரம் மிகவும் சிக்கலான கதாபாத்திரம், என் இயக்குனருக்கு என் மீதுள்ள நம்பிக்கைதான் அதற்கு உயிர் கொடுக்க முடிந்தது.

சல்மான் கானை அனைவருக்கும் பிடிக்கும். ஏன் என்பதை இந்த படம் மீண்டும் காட்டியுள்ளது. இந்த படத்தை பெரியதாக மாற்றியது அவர்தான். இறுதியாக, பண்டிகைக் காலத்தில் இதுபோன்ற பிளாக்பஸ்டரை எங்களுக்கு வழங்கிய ரசிகர்களுக்கு ஒரு பெரிய நன்றி. அன்புடன் நயன்தாரா" என்று நெகிழ்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x