Published : 03 Jun 2021 03:41 PM
Last Updated : 03 Jun 2021 03:41 PM

மகேஷ் பாபு படம் தொடர்பான வதந்தி: உறுதி செய்த கதாசிரியர்

ஹைதராபாத்

மகேஷ் பாபுவின் அடுத்த படம் தொடர்பான வதந்தியை உறுதி செய்துள்ளார் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டன. ஆனால், படத்தின் பணிகள் எதுவுமே இன்னும் தொடங்கப்படவில்லை.

அதற்குள் இந்தப் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதில் இந்தப் படம் ஆப்பரிக்க காடுகளில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஒன்று. இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தார்கள்.

தற்போது இந்த வதந்தியை உறுதி செய்துள்ளார் கதாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத். இந்த வதந்தி தொடர்பான கேள்விக்கு, "இவ்வளவு சீக்கிரம் அதைப் பற்றிப் பேச முடியாது. ஆனால் ஆமாம், மகேஷ் பாபு திரைப்படத்துக்காக ஆப்பரிக்க காடுகளில் நடக்கும் சாகசக் கதை ஒன்றை யோசிக்க முயன்று வருகிறேன்.

இன்னும் இறுதியாகவில்லை. ஆனால் அதைச் சரியாக யோசித்துக் கொண்டு வர முயல்கிறேன். படப்பிடிப்புக்காக இன்னும் தேதிகள் திட்டமிடப்படவில்லை. ஆனால் அடுத்ததாக அது நடக்கலாம்" என்று தெரிவித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.

இந்த தகவலால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x