நடிகர் பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று: பண்ணை வீட்டில் சிகிச்சை; ரசிகர்கள் உருக்கம்

நடிகர் பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று: பண்ணை வீட்டில் சிகிச்சை; ரசிகர்கள் உருக்கம்
Updated on
1 min read

தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய சகோதரர். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 9ஆம் தேதி வக்கீல் சாப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீமேக் இத்திரைப்படம்.

இந்நிலையில், அண்மையில் பவன் கல்யாணுடன் பணியாற்றிய பலருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனா பரிசோதனையும் மேற்கொண்டார். ஆனால் அப்போது நெகட்டிவ் என முடிவு வந்தது.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் அவருக்கு மீண்டும் உடல்வலி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது.

வைரஸ் நோய்த்தடுப்பு நிபுணர்கள் ஹைதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பவன் கல்யாணுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. நுரையீரலில் ஈரப்பதம் இருப்பதால் அவ்வப்போது ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

பவன் கல்யாணின் ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களின் ஹீரோ குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in