ஒரு சண்டைக்காட்சிக்கு 50 நாட்கள்: 'ஆர்.ஆர்.ஆர்' பிரம்மாண்டம்

ஒரு சண்டைக்காட்சிக்கு 50 நாட்கள்: 'ஆர்.ஆர்.ஆர்' பிரம்மாண்டம்
Updated on
1 min read

'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்காக 50 நாட்களில் பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளது படக்குழு.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' வெளியாகவுள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இரவில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். எந்த அளவுக்கு குளிர் இருக்கிறது என்பதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.

தற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு அறிவித்துள்ளது. இதில் 50 நாட்களும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியதாகத் தெரிவித்துள்ளது படக்குழு. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவருமே கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் ஆலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குவார்கள் எனத் தெரிகிறது. கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in