Published : 09 Nov 2020 01:55 PM
Last Updated : 09 Nov 2020 01:55 PM

தெலுங்குத் திரைத்துறைக்கு என்றும் கடன்பட்டிருப்பேன்: சர்ச்சைக் கருத்துகளுக்கு பூஜா ஹெக்டே விளக்கம்

சமீபத்தில் தான் அளித்துள்ள பேட்டியில் தனது கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தான் தெலுங்கு சினிமாவுக்கு என்றும் கடன்பட்டுள்ளதாகவும் நடிகை பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், தெலுங்கு சினிமாவில் பெண் கதாபாத்திரங்களைக் காட்சிப் பொருளாக்குவது குறித்து பூஜா ஹெக்டேவிடம் கேட்கப்பட்டது. அவர் நடித்த 'அலா வைகுந்தபுரமுலோ' திரைப்படத்தின் காட்சிகளையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்திருந்த பூஜா, "தென்னிந்திய சினிமாக்களுக்கு இடுப்புப் பகுதியின் மீது மோகம் இருப்பது உண்மைதான். ஆனால், ஒரு ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை. படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் என் கால்கள் மீது மோகம் கொள்வதுபோல காட்சிகள் இருந்தன. ஆனால், இது படத்தில் எப்படி வரும் என நான் இயக்குநரிடம் கேட்டேன். அதற்காக அந்தக் கதாபாத்திரத்தை நான் தண்டிப்பது போன்ற காட்சிகளைப் பற்றி அவர் சொன்னார். அந்தக் கதாபாத்திரத்தின் தவறுகளை நான் சுட்டிக் காட்டுவது பற்றியும் சொன்னார். இதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், கண்டிப்பாக காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவைப் பற்றி பூஜா ஹெக்டே தவறாகப் பேசிவிட்டதாகவும், அவருக்குத் தொடர் வாய்ப்புகள் அளிக்கும் தெலுங்குத் திரைத்துறையைப் பழித்துப் பேசுவதாகவும் இணையத்தில் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனால் பூஜா ஹெக்டே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தெலுங்கில் பகிரப்பட்ட அந்த அறிக்கையின் தமிழாக்கம்:

"நான் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நான் சொன்னவற்றைத் திரிக்கலாம். ஆனால், தெலுங்குத் திரைத்துறை மீது எனக்கிருக்கும் அன்பைத் திரிக்க முடியாது. சமூக ஊடகங்களில் என்னைப் பற்றித் தீர்மானிக்கும் முன் முழு பேட்டியைப் பாருங்கள்.

தெலுங்குத் திரைத்துறையே எனது உயிர் மூச்சு. எனது படங்களை விரும்பும் என் ரசிகர்களுக்குக் கூட இது தெரியும். தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. நான் என்றும் தெலுங்குத் திரைத்துறைக்குக் கடன்பட்டிருப்பேன் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்".

அடுத்ததாக அகில் அக்கினேனியுடன், 'பொம்மரில்லு' புகழ் பாஸ்கர் இயக்கத்தில் 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' என்கிற திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபாஸுக்கு ஜோடியாக 'ராதே ஷ்யாம்' திரைப்படத்திலும் நடிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x